அன்றாடங்காய்ச்சிகள்.!

by Parimelazhagan P
90 views
அன்றாடங்காய்ச்சிகள்

உழைப்பும்
பிழைப்பும்
பிழைக்கவே
திணறுகிற வெள்ளம்.

இம்மாந்தரின்
வாழ்க்கை பற்றிய
அசாத்திய நம்பிக்கை
வியப்பைத் தருகிறது.

தன்னுடைய அரைவேட்டியே
தண்ணிக்குள்ளே
உருவிகிட்டு நழுவும் நெலையிலும்..
பத்திரமாஅக்கரை ஏறி
நாளைக்குள் கீழவீட்டு
அய்யம்மாளின்
பாசிப்பயறு ஜம்பரை தச்சுத்தரனும்..
என்றெண்ணி சிரிக்கிறாரோ.!

ஏழைகளின் தைரியமே
அன்றாட வாழ்க்கை தரும்
அவர்களின் அநுபவங்கள் தான்.
சோகம் சுகம் ரெண்டுமே ஒன்று தான்.

சோறு முதல்
சொப்பனம் வரை
எல்லாமே கண்ட பிறகே நிஜம்.

திட்டமிடலும் இல்லை.
செமை செமையா
சேத்து வைத்தலும் இல்லை.

அட்சயபாத்திர
செல்வந்தரும் இல்லை.
பிச்சையேந்திடும்
தன்மானங்கெட்டோரும் இல்லை.

“அன்றாடங்காய்ச்சிகள்.!”

பே.பரிமேலழகன்
August 20, 2018

You may also like