நல்லவர்களே! நன்றி ஐயா!!

by Parimelazhagan P
127 views
நன்றி

இயற்கையின் அருட்கொடை மழை.
குடிதண்ணீர்,விவசாய வேலைகளுக்காக
ஏங்கி தவித்து நின்ற நேரத்தில்
கூடுதலாகவே பொழிந்து விட்டது.

எங்கு பார்த்தாலும் வெள்ளம்,
ஏரிகள் நிரம்பி உடைந்தும் போனது.
பெய்த மழையை மண்ணால்
உறிஞ்சவும் முடியல, வடிக்கவும் முடியல.
வீடெல்லாம் வெள்ளக்காடானது.
மக்களுக்கு பெரும் துயரம், பிணி பயம்.

இந்த சமயத்தைப் பயன்படுத்தி
மழையை,அரசாங்கத்தைத் திட்டியே
அனைவரும் பேசினர்.கோபம் கொட்டினர்.
ஊடகங்கள் பீதியைக் கிளப்பி
ஊதிப் பெரிதாக்கின சாத்தான்களாயின.
நாலு வரிகளில் கண்டனக் கவிதைகள் பல.
நியாயம் பேசும் பல பதிவுகள்,படங்கள்.
மனசாட்சி இல்லா எதிர்கட்சி வாதங்கள் என
கோபதாபங்களே கூடி கும்மியடித்தன.

அமைதியாக நினைத்துப் பாருங்கள்.
இத்தனைத் துயரிலும்
சீர் செய்ய,செப்பனிட உழைத்த மனிதர்களை.

அனைத்துவித அரசாங்க ஊழியர்கள்
ஆயிரக்கணக்கானத் தன்னார்வத் தொண்டர்கள்.,
பசி அமர்த்திய பரோபகாரிகள்,
அடைக்கலம் தந்த பள்ளிகள்,மண்டபங்கள்,
மின்சாரம்,தீ அணைப்பு,காவல்துறை ஊழியர்கள்,
மாநகராட்சி.,ராணுவ வீரர்கள் என
லட்சம் பேர் உழைப்பினால் தான் நிலைமை சீரானது.

அவர்களுக்கு “நன்றி” சொன்னால் தானே
நாம் நல்லவர்கள்??
என்ன சொல்றீங்க? ???
யாரும் ஏவி விட்ட கொடுமையா இது?
இயற்கை சீற்றம் என்று தானே சொல்கிறோம்.
ராப்பகலாக நம்மைப் பாதுகாக்க உழைத்த
அந்த நல்லவர்கள் அனைவருக்கும்
நன்றி…நன்றி..கோடானுகோடி நன்றி சொல்வோம்.
அரசுக்கும் நன்றி சொல்வோம்.
நல்ல பண்பாடுகளைப் பேணிக் காப்போம்.
நன்றி!

பே.பரிமேலழகன்
November 25, 2015

You may also like